DMK Government

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா?

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடைப் பணியாளர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் உள்பட அனைவரும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

மேலும், தேர்தல் முடியும் வரை அரசு, புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை வழங்கக்கூடாது.

ஆனால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிசென்னை கனிமவள தலைமை அலுவலகத்தில் தற்போது கனிம வள உதவி இயக்குனர்களை துணை இயக்குனர்களாக மாற்றி உத்தரவுகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க அரசின் இந்த அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு, நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வேலுமணியின் உத்தரவின் பேரில் வீடு வீடாகச் சென்று 500 ரூபாய் பணம், ஒரு வேட்டி, ஒரு சேலை, 200 ரூபாய் மதிப்பிலான ஒரு தட்டு ஆகியவற்றை அ.தி.மு.க நிர்வாகிகள் விநியோகம் செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுங்கட்சியினரின் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளுமா அல்லது கண்டுகொள்ளாமல் விடுமா எனக் கேள்வி எழுப்பப்படுகிறது.

Also Read: தேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்