Election 2026

சென்னையில் புதிதாக 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்! : மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தகவல்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், தேர்தல் விழிப்புணர்வுப் பேருந்து மற்றும் வாகனங்களை ரிப்பன் மாளிகை வளாகத்திலிருந்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன்,

“தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு மேற்கொள்ள தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை முழுவதும் கூட்டம் நிறைந்த பகுதிகளில் அரசுப் பேருந்து மற்றும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகின்ற 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதையொட்டி, தேர்தல் பணியாளர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

வேட்புமனு தாக்கல் ஆன்லைன் மூலமாக செய்ய முடியாது. வேட்புமனுவை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து, அதனை நேரில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்” என தெரிவித்தார்.

Also Read: “NDA கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?” : அமைச்சர் சேகர்பாபு கேள்வி!