DMK

”நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள்” - நலம் விசாரித்தபோது முதல்வரை நெகிழச் செய்த ஆற்காடு வீராசாமி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்கள்நல பணிகள் குறித்து பல தரப்பில் இருந்தும் தொடர்ந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

அவ்வகையில், தி.மு.கவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு குறித்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அண்மையில் வீடு திரும்பியிருக்கிறார். அங்கும் அவருக்கு மருத்துவமனையில் இருப்பது போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்காடு வீராசாமியின் உடல்நிலையை அவரது மகனும் வடசென்னை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினரான கலாநிதி வீராசாமி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று (ஜன.,25) தி.மு.கவின் முன்னாள் பொருளாளரும் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரான ஆற்காடு வீராசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அப்போது முதலமைச்சரிடத்தில் ‘தம்பி நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது’ என ஆற்காடு வீராசாமி கூறியிருக்கிறார். மேலும் கட்சியின் சூழல் குறித்தும் பழைய நினைவுகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களிடம் கலந்துரையாடியிருக்கிறார்.

இந்த நிகழ்வு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நெகிழ்ச்சியடையச் செய்ததோடு கட்சி பணிக்கான உந்துதலையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தமிழுக்கு கலைஞர் ஆட்சி என்ன செய்தது என்று கேட்கும் அறிவிலிகளுக்கான பதில் இதோ..!