DMK

“தினமலரின் தில்லுமுல்லு எங்களிடம் எடுபடாது” : ஓரமாய் போய் விளையாட அறிவுறுத்திய துரைமுருகன் !

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஏக்கத்தில் கழகத்தில் கலகத்தை உருவாக்க நான் முனைவது போல் தினமலர் நாளிதழில் வெளியான செய்தி கண்டிக்கத்தக்கது என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் உருவாக்க நான் முனைவது போல், ஒரு செய்தியை - அதிலும், தலைப்புச் செய்தியாக தினமலர் (7.08.2020) அன்று காலை வெளிவந்த இதழில் வெளியிட்டு இருக்கிறது.

இது என்மீது கலங்கத்தை கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

என் வரலாறு தினமலருக்கு தெரியாது போலும். எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கை பார்த்து ஒரு போராளியாக 1953ம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன்.

நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இருவண்ண கொடியை பிடித்துக் கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவர். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பது தினமலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

Also Read: "நான் சொன்னபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” - துரைமுருகன் பேட்டி!

ஆளுங்கட்சிக்கு பல்லக்கு தூக்குவது,

அமைச்சர்களுக்கு கவரி வீசுவது,

அதனால் ஆதாயம் பெறும் தினமலருக்கு

ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.

சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். தினமலரின் தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது.

Also Read: “கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்!