DMK

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சிற்றரசு நியமனம் : இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம்!

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றி வந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆற்றிய இடைவிடாத களப்பணியின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், போராடி உயிர்நீத்தார்.

இந்நிலையில், மறைந்த ஜெ.அன்பழகன் வகித்த பொறுப்பை ஏற்க நே.சிற்றரசு அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்த அறிவிப்பில், “சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ மறைவெய்திய காரணத்தால், மாவட்ட கழகப் பணிகள் செவ்வனே நடைபெற நே.சிற்றரசு அவர்கள், சென்னை மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதேபோல், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நே.சிற்றரசு அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜெ.அன்பழகன் அவர்களின் புதல்வர் ராஜா அன்பழகன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக தலைமைக் கழக ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "எங்களுக்கு தலைவர் இருக்கிறார்; நீங்கள் கொரோனாவை தடுக்கும் வழியைப் பாருங்கள்” - ஜெ.அன்பழகன் மகன் விளாசல்!