DMK

“அமைப்புசாரா கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5,000 நிதி வழங்குக” - தி.மு.க MLA வேண்டுகோள்!

கொரோனா நிவாரண உதவியாக, கோவையில் உள்ள தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படவேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கோவையில், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து, கோவையில் உள்ள தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதனால், இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 45 நாள் தொடர் ஊரடங்கு முடிந்து, மே மாதம் 7ம் தேதி முதல் சுயகட்டுப்பாடோடு சமூக இடைவெளி பின்பற்றி 50% ஆட்களை வைத்து வேலை செய்து கொள்ளலாம் என்ற அரசின் உத்தரவிற்கு இணங்க, வேலை கிடைத்தால் போதும் என்று அவர்களையே நம்பி உள்ள குடும்பத்தினர்களை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என இருக்கும்போது, அந்த தொழிலாளர்களுக்கு சரியான வேலை இல்லை. இதனால் இந்த தொழிலாளர்கள் வறுமையின் கடைநிலையில் உள்ளார்கள்.

தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 70% சதவிகிதம் பேர் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்பவர்கள். தினசரி வேலை கிடைத்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும், தற்போது கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் வேலை சரிவர இல்லாததால் , வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு , மிகுந்த மனளைச்சலிலும், வறுமையிலும் கடைநிலையில் உள்ளார்கள்.

கோவை மாநகரத்தில் மட்டும் 30,000 குடும்பங்கள் தங்கநகை தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பணி செய்து வருகின்றனர்.

தற்போது அரசு நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் தருவோம் என அரசு அறிவித்துள்ளது. இது மிகுந்த ஏமாற்றத்தை மேற்கண்ட தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நலவாரியத்தில் புதுப்பிக்க மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை துரிதமாக நடைபெறாமல் காலம் தாழ்த்தப்படுகிறது.

எனவே கோவை மாநகரத்தில் உள்ள தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ஒன்றுக்கு ரூ.5000/- வீதம் நான்கு மாதங்களுக்கு ரூ.20,000/- (இருபதாயிரம்) வழங்கிட வேண்டும்.

வீட்டில் அமர்ந்து தனியாக தங்க நகைவேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

மேலும் இந்த தொழிலாளர்களுக்கு , வங்கி மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து , தாங்கள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து, தங்கநகை தயாரிக்கும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் துயர் துடைக்க உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “சொந்த தொகுதி மக்களையே காப்பாற்ற தவறிய ஜெயகுமாரின் போலிச் சிரிப்பை மக்கள் அறிவார்கள்”- தி.மு.க MLA சாடல்!