DMK

“பணிக்கு வந்தால்தான் சம்பளம்” : தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை மிரட்டுவதா? - அரசுக்கு ஆ.ராசா கண்டனம்!

பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் கிடையாது என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை மிரட்டும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் நலனைக் காக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழக அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு ஊரடங்கை முன்னிட்டு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பணிக்கு வந்தால்தான் சம்பளம் கிடைக்கும் என தற்காலிக ஊழியர்களை அதிகாரிகள் மிரட்டி பணிக்கு வரவைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அப்படி வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்புக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கவில்லை. இதுகுறித்த செய்தியறிந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, கொரோனா பாதுகாப்பு முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவற்றை வழங்குவதோடு, பாதுகாப்பான இடைவெளியில் தொழிலாளர்கள் பணியாற்றுவதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினார்.

மேலும் தொழிலாளர்களை மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் ஆ.ராசா வலியுறுத்தினார். அப்போது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம் ஆட்சியர் உறுதியளித்தார்.

Also Read: “கொரோனா பரவுகிறது; டாஸ்மாக்கை மூட உத்தரவிடுங்கள்” - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!