DMK

“சட்டப்பேரவையை அ.தி.மு.க அரசு பிடிவாதமாக நடத்துகிறது” : புறக்கணிப்பதாக தி.மு.க கொறடா சக்கரபாணி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து பணி சுமைகளை அதிகப்படுத்துவதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை முறையாக எடுக்காமல் சட்டமன்றத்தை கடமைக்கு கூட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் தி.மு.க கொறடா சக்கரபாணி செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது சட்டமன்ற கூட்டத்தொடரை தி.மு.க புறக்கணிப்பதாக அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மத்திய அரசு சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள சூழலில் தமிழக அரசு பிடிவாதமாக சட்டமன்றத்தை நடத்தி வருகிறது எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் தமிழக அரசு மீண்டும் மீண்டும் பொய்யான தகவல்களைச் சொல்லி மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது எனத் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்கச் சொல்லி தி.மு.க தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் செவிசாய்க்காததால் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக தி.மு.க கொறடா சக்கரபாணி தெரிவித்தார்.

தி.மு.க-வைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.