DMK

“712 பேர் மீனவர்கள்; 300 மாணவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை”: மீட்கக் கோரி தி.மு.க எம்.எல்.ஏ தீர்மானம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், பிலிப்பைன்ஸ், ஈரான் நாடுகளில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள், மாணவர்கள் இன்னும் நாடு திரும்பாமல் தவித்து வருவதால் நடவடிக்கை எடுக்ககோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கன்னியாகுமரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கொண்டுவந்தார்.

அந்த தீர்மானத்தின் மீது பேசிய ஆஸ்டின், "ஈரானில் 712 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். கப்பல் மூலம் நாடு திரும்புவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் மீனவர்கள் உணவின்றி நீரின்றி தவித்து வருகிறார்கள். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் ஈரான் நாட்டில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த 300 மாணவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.கொரோனா வைரஸினால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் தற்போது நாடு திரும்ப முடியாமல் மணிலாவில் தவித்து வருகிறார்கள். மீனவர்களும் பிலிப்பைன்சில் உள்ள மாணவர்களும் நாடு திரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த வாரம் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகிறார். அதேபோல கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகளும் ஈரான் மீனவர்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Also Read: “அ.தி.மு.க திட்டங்களின் மூலம் 1 யூனிட் மின்சாரத்தையாவது தயாரித்திருக்கிறீர்களா?” - தி.மு.க MLA கேள்வி!

முதலமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதி உடனடியாக இந்திய மீனவர்களையும் மாணவர்களையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்களும், மூத்த அமைச்சர்களும், மீனவர் துறை அமைச்சரும் பிரதமரை சந்தித்து அவர்கள் அனைவரையும் மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: #LIVEUpdate | கொரோனா : பொருளாதார, சுகாதார இழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? : மு.க.ஸ்டாலின் கேள்வி!