DMK

’தூத்துக்குடி,வண்ணாரப்பேட்டை போராட்டங்களில் மக்களைக் கொல்ல அரசுக்கு உதவிய அதிகாரி இவரே!’ - கனிமொழி எம்.பி

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அமைதிவழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தினர். போலிஸ் நடத்திய தடியடியில் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்தனர்.

போலிஸாரின் ஆராஜக போக்கிற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் மீது போலிஸார் நடத்திய அராஜக தாக்குதலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது போலிஸ் தடியடி நடத்தியது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சி.ஏ.ஏ / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐ.பி.எஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது.

தூத்துக்குடியில், ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் கபில்குமார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக கபில்குமார் மீது சி.பி.ஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அ.தி.மு.க அரசு.

வண்ணாரப்பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, கபில் குமார் சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.