DMK
#CAA-வுக்கு எதிரான ‘சண்ட செய்வோம்’ ராப் பாடலைப் பாடிய இளைஞரை சந்தித்துப் பாராட்டிய தி.மு.க தலைவர்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ‘ராப்’ பாடல் பாடிய அறிவு என்ற இளைஞரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த அறிவு என்ற இளைஞர் தனிமனித ராப் பாடல் மூலமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
‘சண்ட செய்வோம்’ என அவர் உருவாக்கிய பாடலை தெருகுரல் என்ற பெயரில் வாரம் ஒருநாள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாடி வந்துள்ளார். கடந்த வாரம் செம்மொழி பூங்கா அருகே இவர் பாடிய இந்த பாடலை இணையதளம் வாயிலாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்து அந்தப் பாடலைப் பாடிய இளைஞரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஓராண்டு முரசொலி மலரை அந்த இளைஞருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். இந்நிகழ்வின் போது தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும், தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாகவும் இளைஞர் அறிவு தனது கையொப்பத்தை பதிவு செய்தார்.
பின்னர் இதுகுறித்துப் பேசிய அறிவு, “என்னுடைய பாடலை தமிழகம் முழுவதும் பார்த்து ரசித்திருந்தாலும் ஒரு மிகப்பெரும் இயக்கத்தின் தலைவர் என்னை அழைத்துப் பாராட்டியது மறக்க முடியாத நிகழ்வாகியுள்ளது” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!