DMK

“பணம் படைத்தவர்களுக்கே அரசு வேலை என்கிற சூழலை உருவாக்கிவிட்டது அ.தி.மு.க அரசு” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

பணம் படைத்தவர்களுக்கே அரசு வேலை என்கிற சூழலை அ.தி.மு.க அரசு உருவாக்கி விட்டதாக TNPSC முறைகேட்டுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது தமிழகத்தை உலுக்கியது. தேர்வை நடத்திய அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்ட அம்பலமானது. இந்த முறைகேடு தொடர்பாக வரிசையாக பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

மத்திய பிரதேச மாநிலத்தின் வியாபாம் ஊழலைப் போல, தமிழ்நாட்டின் வியாபம் எனச் சொல்லும் அளவுக்கு டி.என்.பி.எஸ்.சி மோசடி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை பாரிமுனை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், முறையான விசாரணையை மாநில அரசு செய்யாது என்பதால் தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே தேர்வு முறை கொண்டு வரப்பட்டது எனவும், அதையும் அ.தி.மு.க அரசு லஞ்சம் பெற்றுக்கொண்டு பணம் படைத்தவர்களுக்கு அரசு வேலை என்ற சூழலை உருவாக்கி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை நேர்மையாக செய்யாத அ.தி.மு.க அரசு, தேர்வாணைய முறைகேடு வழக்கையும் முறையாக விசாரிக்காது எனவே வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என தி.மு.க வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சேகர் பாபு, சுதர்சனம், மா.சுப்ரமணியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் கவி, ப.ரங்கநாதன், மற்றும் அன்பில் மகேஷ், ஆர்.டி.சேகர், ஜின்னா உள்ளிட்ட ஏராளமான இளைஞரணி அமைப்பாளர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Also Read: #CAA-வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் : நேரடியாக களத்தில் இறங்கி கையெழுத்து பெறும் மு.க.ஸ்டாலின்!