DMK
தி.மு.கவின் தீவிரத் தொண்டர் மறைவுக்கு தி.மு.க தலைவர் உருக்கமான இரங்கல்!
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொறுப்பு வகிக்காவிட்டாலும், பயன் கருதாமல் கழகத்திற்காகப் பணியாற்றி வந்த 75 வயது மூதாட்டி பாப்பாத்தி அம்மாள் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பயன் கருதாமல், பலன் எதிர்பாராமல் கழகம் காத்திட பாடுபட்ட பாப்பாத்தி அம்மையார் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரான 75 வயது மூதாட்டி பாப்பாத்தி அம்மையார், 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் கழக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அறிவாலயத்திற்கு அழைத்து நான் ஆலோசனை நடத்தியபோது, தன் சொந்த செலவில் சென்னைக்கு வந்திருந்ததை அறிந்தேன்.
அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லையென்றாலும், கழகத்தின் மீது கொண்ட பற்றினை அறிந்து, அவரை அழைத்துப் பேசியதுடன், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களையும் சந்திக்கச் செய்தேன்.
மிகுந்த அன்புடனும் கழகப் பற்றுடனும் தலைவரிடம் வாழ்த்துப் பெற்று, தலைவரையும் வாழ்த்திய அந்த அம்மையார், என்னுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்த நிகழ்வு அது.
பாப்பாத்தி அம்மையார் போன்ற பயன் கருதாத் தொண்டர்களால் நிலைத்திருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். அம்மையார் அவர்கள் மறைவெய்தினார்கள் என்ற செய்தி வேதனையை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், இயக்கத்தினர் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்திடும் அதே நிலையில், இது கழகக் குடும்பத்தில் ஏற்பட்ட துயரம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!