DMK

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம்: டெல்டாவில் இன்று நடைபெறுகிறது!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கிணறு அமைக்க சுற்றுச்சூழல் அனுமதியும் பொதுமக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்று பா.ஜ.க அரசு அண்மையில் அறிவித்தது.

இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரிப் படுகையை, பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், அதற்கு துணைபோகும் தமிழக அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் தி.மு.க சார்பில் ஜனவரி 28-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தஞ்சை வடக்கு - தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவும், புதுக்கோட்டை வடக்கு – தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலிலும், கடலூர் கிழக்கு – மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகிலும், நாகை வடக்கு – தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் - அவரி திடலிலும், திருவாரூர் மாவட்ட தி.மு.க சார்பில், ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரிலும் எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்தப் போராட்டங்களில் தி.மு.கவினர் மட்டுமின்றி, விவசாயிகள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்கின்றனர்..

Also Read: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான அறப்போரில் அணி திரள்வோம்-உடன் பிறப்புகளுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்