DMK

GST வரியால் தமிழகத்துக்கு இழப்பு - மத்திய அரசைக் கேள்வி கேட்க அஞ்சும் அ.தி.மு.க : டி.ஆர் பாலு ஆவேசம்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் வசூலிக்கப்படும் தொகையில் மத்திய அரசும் பங்கெடுப்பதால் மாநில வரி வருவாய் பாதிக்கப்படுகிறது. அதை ஈடுகட்டும் விதமாக மாநில அரசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகையை திரட்டுவதற்காகவே ஜி.எஸ்.டி வரியில் கூடுதலாக இழப்பீட்டு வரி கொண்டு வரப்பட்டது.

இந்த இழப்பீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்குவதற்கு மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் உறுதி அளித்தபடி வழங்வில்லை. இதை குறிப்பிட்டும் தமிழகத்திற்கான இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்றும் மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய டி.ஆர்.பாலு, சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரியால் மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு ஆண்டு வருவாய் 14 சதவிகிதம் என்கிற அளவிற்கு வருவாய் குறைந்து இருந்தால், மத்திய அரசு மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சட்ட ரீதியாக ஈடுசெய்ய வேண்டும் என்கிற ஆணை ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

இந்த வரி விதிப்பால் நஷ்டமடைந்துள்ள மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் வரையிலான இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரி கடந்த நவம்பர் மாதம் மத்திய நிதியமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். தங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கு மத்திய அரசு சட்ட ரீதியாக ஈடு செய்ய வேண்டும் என்று அவர்கள் முறையிட்டுள்ளார்கள்.

ஆனால் தமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடு செய்ய மத்திய அரசை, தமிழக நிதி அமைச்சரோ வேறு அமைச்சர்களோ அல்லது பிரதிநிதிகளோ இதுவரை வலியுறுத்தவில்லை. மத்திய அரசை அவர்கள் கேட்கவே பயப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வாய்த் திறக்கக்கூட உங்களிடம் அனுமதியை எதிர்பார்க்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு அமைச்சர்களின் நிலை.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆளும்கட்சியினர் அக்கறை காட்டாவிட்டாலும் தன் கடமையை உணர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் மத்திய அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டயீட்டை உடனடியாக தாமதமின்றி ஈடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே தமிழகம் அ.தி.மு.க. ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், ரூபாய் 3 லட்சத்து 97 ஆயிரத்து 455 கோடி கடன் வலையில் சிக்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி.வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள நிதியிழப்பை ஈடு செய்ய மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.