DMK
“கலைஞர் என்னைப் பாராட்டியது போல உதயநிதியை நான் பாராட்டும் சூழல் வந்து கொண்டிருக்கிறது” - மு.க.ஸ்டாலின்
தி.மு.க இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 30 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிடப்பட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் 1,20,000க்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்த சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இளைஞரணியை வலுப்படுத்துவதற்கும், அதன் மூலமாக கழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் தி.மு.க இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றதுமுதல், கழகத்திற்கு வலுசேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் சேர்க்கவேண்டும் என முடிவெடுத்து, மொத்தமாக 30 லட்சம் பேரை இளைஞரணியில் இணைக்கவேண்டும் என திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது இளைஞரணி. இன்றைக்கு நிகழக்கூடிய விழா 30 லட்சமென்ன, 50 லட்சம் பேரை இளைஞரணியில் இணைக்கலாம் எனும் நம்பிக்கையை எனக்குக் கொடுத்திருக்கிறது.
சென்னை தெற்கு மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளைஞரணியில் புதிதாக இணைந்துள்ளனர். மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனின் முயற்சியாலும், வழிகாட்டலினாலும் இது சாத்தியமாகி இருக்கிறது. மற்ற மாவட்டங்களின் அமைப்பாளர்களுக்கும் இவரது முயற்சியே ஒரு தூண்டுகோலாக அமையும் என நான் நம்புகிறேன்.
இளைஞரணியின் பொறுப்பை நான் ஏற்ற பிறகு எனது செயல்பாடுகளைப் பார்த்தும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எனது செயல்பாடுகளை உணர்ந்தும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்னைப் பலமுறை பாராட்டி இருக்கிறார். “நானும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்திருக்கக்கூடாதா எனும் ஆசை வந்திருக்கிறது” எனவும், “என் மகன் உழைப்பதைப் பார்த்து நான் பொறாமை கொள்கிறேன்” எனவும் சொல்லி இருக்கிறார் தலைவர் கலைஞர்.
அதேபோல உதயநிதியை பாராட்டும் சூழல் எனக்கு ஏற்படும் என்ற நம்பிக்கை வெகுவாக இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.
உதயநிதியோடு இணைந்து தோள் கொடுக்கும் செயல்வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றித் தந்திருக்கும் மா.சுப்பிரமணியனுக்கு தி.மு.கழகம் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.
பின்னர், இளைஞரணியில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கத் துணைபுரிந்த தி.மு.க பகுதிச் செயலாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!