DMK

தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க கோரிக்கை மனு - பிரதமரிடம் வழங்கிய எம்.பிக்கள்!

மேகதாது அணை, விவசாயிகள் பிரச்னை உள்பட தமிழகத்தில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் தி.மு.க எம்.பிக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பிரதமர் மோடியிடம் தி.மு.க எம்.பிக்கள் அளித்த மனுவில், மேகதாது அணை, விவசாயிகள் பிரச்னை, மத்திய அரசு வேலையில் தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை தி.மு.க தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.

பிரதமர் மோடியைச் சந்தித்த தி.மு.க எம்.பி.க்கள், தமிழக பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கோரிக்கை மனுவை வழங்கினர். 16 கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தது தொடர்பாக திருச்சி சிவா எம்.பி., பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும்; மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.

மேலும், சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும்; எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்; முல்லைப்பெரியாறு, மேகதாது, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் பிரதமருக்கு தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளது.” எனத் தெரிவித்தார்.

Also Read: “ஜனநாயக படுகொலை எங்கு நிகழ்ந்தாலும் தி.மு.க குரல் எழுப்பும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!