DMK

பரூக் அப்துல்லா கைது : நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த தயாநிதிமாறன்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானத்தை ஆகஸ்ட் மாதம் மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அதுமட்டுமின்றி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையே இராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது பற்றி பாராளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்.

அப்போது பேசிய அவர், “ ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பரூக் அப்துல்லா அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமான வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதி எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பரூக் அப்துல்லா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலும் காஷ்மீர் அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு உறுப்பினரையும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்திய பின்னர் முறையாக, நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

ஆனால், சபாநாயகர் அவர்களுக்கும் இப்பேரவைக்கும் உரிய முறையில் தகவலை மூன்று மாதங்களாகியும் தகவல் அளிக்காதது ஏன்.

இது நாடாளுமன்ற விதிகளை மீறும் செயல் மட்டுமல்ல பேரவையின் சபாநாயகர் அவர்களை அவமதிக்கும் செயல். இது போன்ற செயல்கள் அவையின் மாண்பினை குலைக்கும் செயல்.” என கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.