DMK

“உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தி.மு.க-வின் 10,000 வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்” - ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதுமுள்ள வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு சட்டத்துறைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார். தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கலைஞர் அருங்காட்சியம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மிசா வரலாற்றை அவதூறாகப் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் செயலில் ஈடுபடும் பா.ஜ.கவுக்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மொழி தெரியாதவர்கள் சிவில் நீதிபதி தேர்வில் பங்கு பெற வழிவகுக்கும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பாணை திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அரசு பல குளறுபடிகள் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால், அவற்றை முறியடித்து தி.மு.க அமோக வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தி.மு.க சட்டத்துறையைச் சேர்ந்த பத்தாயிரம் வழக்கறிஞர்கள் ஈடுபட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.