DMK

பாஜகவுக்கு கையாக இருப்பதை விடுத்து, நீலகிரி மக்களுக்கு கைகொடுத்திடுக : தமிழக அரசுக்கு கனிமொழி வேண்டுகோள்!

சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 13) செய்தியாளர்களைச் சந்தித்தார் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி. அப்போது பேசிய கனிமொழி, "நீலகிரி வெள்ளத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நீலகிரி மக்களுக்கு தமிழக அரசு எந்தவித உதவிகளையும் சரியாகச் செய்யவில்லை.” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, அரசு தனது கடமையைச் சரிவரச் செய்யாததால் தான் தி.மு.க தலைவர் அங்கே சென்றார். இதன்பிறகாவது, தமிழக அரசு செயல்படத் தொடங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு இனியாவது முன்வர வேண்டும்.

இயற்கைப் பேரிடர் நிவாரண நிதிகளைப் பெற தி.மு.க தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வோ பா.ஜ.கவின் மற்றொரு கையாகவே செயல்படுகிறது. சொந்த மாநிலம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்திலாவது, தமிழக அரசு இங்கிருக்கும் பிரச்னைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, நிதி உதவியைப் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

அ.தி.மு.க மத்திய அரசு செய்யும் அனைத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. பா.ஜ.க கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் ஆதரித்து வாக்களிக்கக் கூடியவர்கள், தமிழகம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்திலாவது கோரிக்கைகளை முன்வைத்து, நியாயமான நிதியைப் பெற வேண்டும்", எனத் தெரிவித்தார் கனிமொழி.