DMK

ரயில் டிக்கெட்டில் ஏன் இந்த வாசகம்? சலுகை பெறுவதால் மக்களை தாழ்வாக நினைப்பதா? - கொந்தளித்த திருச்சி சிவா

ரயில் பயணக் கட்டணங்களில், மூத்த குடிமக்கள், 40 வயது கடந்த பெண்கள், ஊனமுற்றவர்கள் என பலவகை சலுகைகளை வழங்குகிறது இந்திய ரயில்வே. ஆனால், சலுகை வழங்குவதை மக்களுக்கு சொல்லிக் காட்டும் வகையில், டிக்கெட்டின் பின் புறத்தில், " உங்கள் பயணத்துக்கு ஆகும் செலவில் 43 வீதத்தை, சாதாரண இந்திய குடிமக்கள் ஏற்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வாசகம் இந்திய மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக, தி.மு.க எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அவர் பேசியதாவது ”இந்திய ரயில்வே துறை மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற டிக்கெட்களில், இந்த பயணத்திற்கு 43 சதவீத தொகையை இந்தியக் குடிமக்கள் வழங்குகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்களின் டிக்கெட்களில் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரின் டிக்கெட்களிலும் இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது.

ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ள இந்த வாசகம் இந்திய குடிமக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. அரசு வழங்கும் சலுகைகள் என்பது ஒருவரின் சுயமரியாதைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயக நாட்டிற்கு அடையாளம். ரயிலில் பயணிக்கும் அனைத்து மக்களும் வரி செலுத்துபவர்கள் தான். அப்படி இருக்கும் போது, யாருக்காக இந்த வாசகத்தை குறிப்பிட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. சலுகை பெரும் மக்களை தாழ்வாக சித்தரிக்கும் இந்த வாசகத்தை உடனடியாக நீக்க ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கடுமையான கண்டனங்களோடு வலியுறுத்தியிருக்கிறார்.