DMK

மத்திய அரசுக்கு வளைந்துகொடுக்கக் கூடாது : சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பேச்சு!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இன்று ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

தொடர்ந்து பேசிய டி.ஆர்.பி.ராஜா, “மத்திய அரசு, ஒற்றை உரிமம் மூலம் இயற்கை எரிவாயு உட்பட அனைத்து வகை எரிபொருளையும் உற்பத்தி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளதா” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்.எல்.ஏ., “தமிழகத்துக்கான மருத்துவ இடங்களை அதிகரிக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோர வேண்டும். அது நம் மாநிலத்தின் உரிமை. திராவிட இயக்கக் கொள்கைகளிலும் - சமூகநீதிக் கொள்கைகளிலும் நாம் உறுதியாக இருக்கவேண்டும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதை வழிமொழிகிறேன்” எனத் தெரிவித்தார்.

“மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிடவும் - மத்திய அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும” என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.

‘ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை’ என்பது மாநில உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சிக்கு உலை வைக்கும் திட்டம்; இந்தி பேசுபவர்களை தமிழ்நாட்டில் குடியேற்றி நம்முடைய சலுகைகளை பறிக்கும் முயற்சி” என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., குற்றம்சாட்டினார்.

“கூடலூர் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு தி.மு.க அரசு வழங்கியது போல இந்த அரசும் பட்டா வழங்க வேண்டும்” என முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார்.