DMK

ஒரே நாடு.. ஒரே ரேஷன் அட்டை : தமிழகத்தின் கடன் சுமையை அதிகரிக்கும் - எ.வ வேலு கருத்து

''ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை'' விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு.

அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும், வித்தியாசமான உணவு பழக்க வழக்கங்கள் உள்ளது. சில மாநிலங்களில் உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்குவதில்லை. அப்படி வழங்கினாலும் மத்திய பிரதேசத்தில் அரிசி 35 கிலோ மேற்கு வங்கத்தில் 15 கிலோ மட்டுமே கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 20 கிலோ இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு கோடியே 93 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டையில் உள்ளது. அவர்களுக்கு 3.25 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது.ஏற்கனவே தமிழகத்தில் அரிசி குறைபாடு உள்ளது.

அதுமட்டுமில்லாமல் வெளி மாநில மக்கள் இங்கு பணிபுரியும் காரணத்தால் அவர்களுக்கு குடும்ப அட்டைகள் கொடுக்கும் பொழுது இன்னும் தேவை என்பது அதிகரித்து காணப்படும். அப்படி இருக்கையில் தமிழகத்திற்கு நிதி சுமை அதிகம் ஏற்படும். அதே போல் அரிசி தேவை என்பது பணம் கொடுத்து வெளிமாநிலங்களில் வாங்குவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும்.

தமிழக மக்களுக்கு அரிசி கிடைக்காமல் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள். ''ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை'' என மத்திய அரசு தெரிவிப்பது வடமாநில இந்தி மொழி பேசும் மக்களை தமிழகத்தில் புகுத்தி தமிழ்நாட்டை இந்தி பேசும் மாநிலமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது என்ற அச்சம் ஏற்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. எனவே இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழக அரசு நிலைப்பாடு என்ன என்பதை அமைச்சர் தெரிவிக்க வேண்டும் '' இவ்வாறு தெரிவித்தார்.