DMK

'தமிழகத்தில் இருப்பது ஊழல் அரசு' - எதிர்ப்புக்கிடையே தயாநிதி மாறன் மக்களவையில் ஆக்ரோஷ உரை!

மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், ஊழல் பற்றி குடியரசு தலைவர் பேசியதை மேற்கோள் காட்டி, தமிழக அரசு ஒரு ஊழல் அரசு என குற்றம்சாட்டி ஆக்ரோஷமாக பேசினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன். அதற்கு அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க தரப்பில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியதால் சபையில் காரசார விவாதம் நடைபெற்றது.

தண்ணீர் பிரச்னை, காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவது, இந்தி திணிப்பை பற்றியும் தயாநிதி மாறன் பேசியதாவது, " புவி வெப்பமயமாதலால் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தி.மு.க அரசு கொண்டு வந்தது. ஆனால், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து குடிநீர் ஆதாரத்துக்கான எந்த புதிய திட்டங்களையும் அ.தி.மு.க அரசு கொண்டு வரவில்லை. நீர் ஆதரங்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது. மாறாக அ.தி.மு.க அரசு ஊழல் செய்வதிலேயே குறியாக இருந்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் மீது சி.பி.ஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டமன்றத்தில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியுள்ளது.” என்று திட்டவட்டமாக குற்றம்சாட்டினார்.

தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. அதற்கும் தயாநிதி மாறன் பதிலளித்து, தனது பேச்சை தொடர்ந்தார்.

” நீட் தேர்வு, இந்தியை திணிப்பது போன்ற காரணங்களால் தான் பா.ஜ.கவை தமிழகம் புறக்கணித்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் தான் பா.ஜ.க வட இந்தியாவில் வென்றது. 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளில் வென்றது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா உத்தரவிட்ட பின்னரும் கூட நீர் திறக்கப்படவில்லை. தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் போனால் மாற்றாந்தாய் மனப்பானையுடன் நடந்து கொள்வீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

‘அதிமுக அரசு ஊழல் அரசு’ என்ற தயாநிதிமாறன் தெரிவித்த கருத்து, நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கபடுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

தயாநிதி மாறன் மக்களவையில் பேசிய ஆக்ரோஷ உரையை கீழ் உள்ள வீடியோவில் முழுவதுமாக பார்க்கலாம்.