DMK

தண்ணீர் பஞ்சத்தை போக்காத அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம்!

தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காத எடப்பாடி அரசைக் கண்டித்தும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதேப்போல், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் சார்பில், தண்ணீர் பஞ்சத்தை போக்காத அ.தி.மு.க அரசுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தி.மு.க. தொண்டர்களுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு எடப்பாடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வம், மோகன், மற்றும் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.