Cinema

CAMPA Energy : அஜித்திற்கு எதிராக திரும்பிய ரசிகர்கள்… இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு... இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள அஜித்குமார், தற்போது ரேசிங்கிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய அஜித்குமார் ரேசிங் அணிக்கு, கடந்த நவம்பர் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் FMCG பிரிவான, ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (RCPL), தனது ஸ்பான்சர்ஷிப்பை அறிவித்தது.

நடிகர் அஜித் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர். இப்போதும் அவர் எந்த படத்தில் நடிக்கிறார் என்ற எந்த ஒரு அப்டேட்டும் இல்லாதபோதும் கூட அவருடைய ரசிகர்கள் இன்றளவும் காத்துக்கிடப்பார்கள்.

ஒரு காலகட்டத்தில் ரசிகர் மன்றங்கள், கோஷங்கள், பால் அபிஷேகம் எல்லாம் அதிகரித்த நேரத்தில் அஜித்தே நேரடியாக வந்து "இதெல்லாம் வேண்டாம்" எனக்கூறி ரசிகர் மன்றங்களையும் கலைத்தார். அது மட்டுமல்ல, "தலன்னு கூட என்னை அழைக்க வேண்டாம்" என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

குறிப்பாக அஜித் எந்தவொரு தனது பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். அது அவருடைய குணமாகவே மாறிப்போனது.

ஆனால், பல வருடங்களாக விளம்பரம் இல்லை, புரமோஷன் இல்லை என்று கண்டிப்பாக இருந்த அஜித், திடீரென ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'கேம்பா எனர்ஜி' (Campa Energy) எனர்ஜி குளிர்பான விளம்பரத்தில் நடித்தது தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.

'கேம்பா எனர்ஜி' குளிர்பான விளம்பரத்தின் காட்சிகள் அண்மையில் வெளியானது. இதில், அஜித் குளிர்பானத்தை அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. உடனடியாக சமூக வலைதளத்தில் பரவிய இந்த விளம்பரம், அஜித்தின் ரசிகர்களாலேயே விமர்சனத்துக்குளானது.

எப்போதும் அஜித்திற்கு ஆதரவாக களமாடும் அவரது ரசிகர்கள் இந்த முறை அஜித் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். பல கோடி பணம் செலவழித்து படம் எடுத்தபோது கூட, ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வெளியே வராத அஜித் தற்போது இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கிறார். அதுவுமில்லாமல் இது போன்ற குளிர்பானங்கள் உடலுக்கு நல்லதல்ல என்றும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு தரப்பு ரசிகர்கள் இவ்வாறு பேச, மற்றொரு தரப்பினர் அஜித் ரேசிங்கில் சிறுவயதில் இருந்தே தீவிர ஆர்வமாக இருந்துவருகிறார். அதனால் தான் தான் சினிமாவில் சம்பாதித்த பெரும்தொகையை தனது ரேசிங் அணியில் முதலீடு செய்துள்ளார். இந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக ரேசிங் போட்டிகள் பெரும்பாலும் வெளிநாட்டில் நடக்கும் என்பதால், தொழில்நுட்பரீதியாக அணிக்கு நிதிச்சிக்கல் நிலவும்.

அதனால் தான் ஸ்பான்சர்ஷிப்புக்காக இந்த 'கேம்பா எனர்ஜி' விளம்பரத்தில் நடித்துள்ளார் என்றும், அதற்காக பெரிய தொகை பெற்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், தவறு செய்தால் ஆதரவாக உள்ள ரசிகர்களே கேள்வி எழுப்புகிறார்கள். விஜய் ரசிகர்கள் போல அனைத்திற்கும் ஆதரவாக இருக்க முடியாது என சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனலை கிளப்பியுள்ளது.

விஜய் ரசிகர்களே கூட "இதில் அஜித் ரசிகர்கள் பேசுவது நியாயம் தான்" என்று சொல்லும் அளவுக்கு இது தற்போது பெரிதாகி இருக்கிறது.

Also Read: பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!