Cinema
அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் புகார்கள் : தெலங்கானா அரசுக்கு நடிகை சமந்தா கோரிக்கை !
மலையாள திரையுலகேயே தற்போது உலுக்கி வரும் நடிகைகள் மீதான திரை பிரபலங்களின் பாலியல் அத்துமீறல் விவகாரம் இந்திய திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையின் மூலம், நடிகைகள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகைகள் சிலர் வெளிப்படையாக புகார்கள் வைத்து வருகின்றனர். இந்த புகார்களின் அடிப்படையில் மலையாள நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் மோகன்லால், மலையாள திரை நடிகர்கள் சங்கத்தில் இருந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததுடன், அவருடன் சேர்ந்து 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இப்படியாக மலையாள திரையுலகை உலுக்கி வரும் இந்த விவகாரத்தை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் விவகாரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெலங்கானா அரசுக்கு நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
The Voice Of Women என்ற அமைப்பு, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெலங்கானா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து The Voice Of Women வெளியிட்டுள்ள அறிக்கையை நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
"மலையாள திரையுலகில் தற்போது பெரிதாகி இருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கையை தெலுங்கு சினிமா நடிகைகளான நாங்கள் வரவேற்கிறோம். இதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட மலையாள சினிமா துறையின் 'Women In Cinema Collective (WCC)' என்ற பெண்கள் அமைப்பையும் பாராட்டுகிறோம்.
இதே போல் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு திரைத் துறையில் 'The Voice Of Women' என்ற அமைப்பு பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்த குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசும் வெளியிட வேண்டும். அது வெளியானால்தான் தெலுங்கு திரை உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும்"
நடிகை சமந்தாவை தொடர்ந்து தற்போது பலரும் இதற்காக குரலெழுப்பி வருகின்றனர். இது போல் அனைத்து திரையுலகிலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!