Cinema

“தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் சினிமாவில் சிறந்து விளங்க தூண்டுகிறது” - நடிகர் கௌதம் கார்த்திக் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விருது வழங்கும் விழா நடைபெறாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சியமைத்த பிறகு விருது வழங்கப்படாத ஆண்டுகளுக்கும் சேர்த்து விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் ஜோதிகா, சுதா கொங்கரா, சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் விருதுகளை வென்றனர். அந்த வகையில் சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு பிரிவில் நடிகர் கௌதம் கார்த்திக் 'வை ராஜா வை' படத்திற்காக விருதை வென்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் தமிழ்நாடு அரசு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வருமாறு :

“அன்புள்ள அனைவருக்கும், “வை ராஜா வை” திரைப்படத்தில் நான் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான (சிறப்பு பரிசு) தமிழ்நாடு அரசின் விருது வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மாநில அரசின் அங்கீகாரம் என்னை சினிமாத் துறையில் சிறந்து விளங்க தூண்டுகிறது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்திற்கு நன்றி. எனது தயாரிப்பாளருக்கு, AGS என்டர்டெயின்மென்ட்: இந்த சிறந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கும், இதுபோன்ற அற்புதமான அனுபவத்தை எனக்கு வழங்கியதற்கும் நன்றி.

எனது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையால் எனது கதாபாத்திரத்திற்கு திரையில் உயிர்ப்பிக்க உதவியாக இருந்தது. உங்கள் வழிகாட்டுதலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உங்கள் அனைவரின் ஆதரவு இல்லாமல் நான் இதை அடைந்திருக்க முடியாது. இந்த ஆதரவு இன்னும் என்னை. கடினமாக உழைக்கவும், எனது படங்களில் உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கவும் என்னை தூண்டுகிறது. நீங்கள் அனைவரும் தொடர்ந்து என்னை ஊக்குவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மிக முக்கியமாக, எனது குடும்பம் எனக்கு அளித்த அன்பு மற்றும் ஆதரவால் தான் இவ்விருது எனக்கு சாத்தியமானது. எனது வாழ்வின் கடினமான தருணங்களில் கூட எனக்கு பக்கபலமாக இருந்ததற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! என்னுடன் இணைந்து விருதுகளை வென்ற சினிமாத்துறையைச் சேர்ந்த மற்ற சகாக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”