Cinema

பிரபல Squid Game தொடரின் நடிகருக்கு ஒராண்டு சிறை தண்டனை: ரசிகர்கள் அதிர்ச்சி - காரணம் என்ன?

தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த 'Squid Game' வெப் சீரிஸ் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகில் அதிகம் பேர் விரும்பி பார்த்த வெப் சீரிஸ் என்ற சாதனையையும் 'Squid Game' படைத்தது.

'Squid Game' வெப் சீரிஸுக்கு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. நெட்ஃபிளிக்ஸில் இதுவரை வெளியான தொடர்களிலேயே மிகவும் ஹிட்டான தொடராக இது உள்ளது. ஒன்பது பாகங்களைக் கொண்ட இந்த தொடர் வெளியான ஒரே மாதத்தில் 111 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனை படைத்தது.

இந்த ‘ஸ்குயிட் கேம்’ தொடரில் Player 001 எனும் கேரக்டரில் நடித்த ஓ யோங்-சுவுக்கு 2022ஆம் ஆண்டுசிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக தென் கொரியாவிலிருந்து கோல்டன் குளோப் விருது பெரும் முதல் நடிகர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

இந்த பெருமைக்கும் மத்தியில் தனது 78வது வயதில் ஓ யோங்-சுவு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். 2017ம் ஆண்டு தகாத முறையில் தன்னை தொட்டதாக பாதிக்கப்பட்டப் பெண் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மேல்முறையீடு செய்தார். பின்னர் சுவோன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் நடிகர் ஓ யோங்-சுவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இளம் நடிகர்களுடன் நடிக்கவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறும் நடிகர் ஓ யோங்-சுவு, "இந்த வயதில் நீதிமன்றத்தில் நிற்பது மிகவும் வேதனையாகவும் கடினமாகவும் இருக்கிறது. என் வாழ்நாளின் கடைசி அத்தியாயம் இப்படி முடிவது வருத்தமாக இருக்கிறது" என கூறி பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Also Read: "இந்த நிலையை மாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்" - அன்னபூரணி பட விவகாரம் குறித்து பிரபல இயக்குநர் கருத்து!