Cinema

“அரசியல் பேசினால் என்ன தப்பு ?” - Blue Star விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன் தடாலடி !

பிரபல நடிகர் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், ஷாந்தனு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் 'ப்ளூ ஸ்டார்'. அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' தயாரிக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரெயிலின் ஒலிகள்...’, ‘அரக்கோணம்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து கடந்த வாரம் இந்த படத்தின் ட்ரைய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் இந்த படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன், பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது படங்களில் தங்களுக்கு இருந்த அனுபவங்கள் குறித்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர். அப்போது நடிகை கீர்த்தி பாண்டியன் பேசியதாவது, "இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் பயணம் எனக்கு 2022-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது எனக்கு இயக்குநர் ஜெயக்குமார் இந்த படத்தின் கதையை கூறினார். விளையாட்டை மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெயர் இடம் பெற்றாலே, அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விட்டீர்களா என்று தான் கருத்துகள் வருகிறது. அரசியல் பேசினால் என்ன தப்பு? அப்படி கேட்பவர்களிடம் ஒரே கேள்விதான் கேட்கவேண்டும்.. நாம் அணியும் உடையில் இருந்து, சாப்பாடு - தண்ணீர் என அனைத்திலும் அரசியல் இருக்கிறது. அது பேசவில்லை என்றால், அது இல்லை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் அதை தவிர்க்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

அதனால் இந்த படத்திலும் அரசியல் இருக்கிறது; நாம் எடுக்கும் அனைத்து படங்களிலும் அரசியல் இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கும், தயாரிக்கும் அவரது அனைத்து படங்களிலும் அவர் சொல்லும் கருத்து மிகவும் முக்கியம். அந்த விதத்தில் இந்த படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. முக்கோண அரசியல், காதல் என அனைத்தும் இந்த படத்தில் இருக்கிறது.

இன்று இந்த இசை வெளியீட்டு விழா நடப்பது மிகவும் முக்கியமான ஒன்று என்று கருதுகிறேன். பாடகர், பாடலாசிரியர் அறிவு எழுத்தில் இந்த படத்தில் (ப்ளூ ஸ்டார்) இடம்பெற்றுள்ள ‘அரக்கோணம் ஸ்டைல்...’ பாடலில் வரும் "காலு மேல கால போடு ராவண குலமே, மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே...” நன்றி வணக்கம்." என்று கூறினார்.

இன்று இராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்று வரும் நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியனின் இந்த பாடல் வரிகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: சமாதானம் பேச முயன்ற ஷகீலா... ஆத்திரத்தில் தாக்கிய வளர்ப்பு மகளின் குடும்பத்தார்... போலீசில் பரபர புகார் !