Cinema

KGF நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கட்அவுட் வைத்த ரசிகர்கள் மீது பாய்ந்த மின்சாரம் - 3 பேர் பரிதாப பலி!

கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் KGF. யாஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான இப்படம், இந்திய அளவில் பெரிய சாதனை படைத்தது. மேலும் கன்னட சினிமாவில் இது ஒரு புதிய அத்தியாயமாக விளங்கியது. இதுவரை கண்டிராத கன்னடா திரையுலகம் தனது முதல் அடியை எடுத்து வைத்தது.

இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு KGF படத்தின் 2-ம் பாகம் வெளியானது. இந்த படமும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் சாதனையை படைத்தது. இதன் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் நடிகர் யாஷ் பிரபலமானார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பெரிய ஹிட் கொடுத்த நிலையில், இதன் அடுத்த பாகமும் விரைவில் உருவாக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு முன்னர் யாஷ் சில படங்களில் நடித்திருந்தாலும், KGF படம் இவருக்கு ஒரு அடையாளமாகவும், திருப்புமுனையாகவும் இருந்தது. இதனாலே இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனால் இவரது பிறந்தநாள், பட வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளை ரசிகர்கள் பேனர், கட் அவுட் உள்ளிட்டவையை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடிகர் யாஷ் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தற்போது திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலை கர்நாடக மாநிலத்தின் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற கிராமத்தில் இளைஞர்கள் சிலர் இவரது கட் அவுட் வைத்து கொண்டாட எண்ணியுள்ளனர்.

அதன்படி நேற்று இரவு நேரத்தில் யாஷ் புகைப்படம் பொருந்திய சுமார் 25 அடி கட் அவுட்டை ரசிகர்கள் வைக்க முயன்றனர். அப்போது திடீரென மின்சார கம்பியில் அந்த கட் அவுட் உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து ஹனுமந்த (21), முரளி (20), நவீன் (19) ஆகிய பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து படுகாயமடைந்த 8 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அமைச்சர் PTR கொடுத்த விளக்கத்தை பாருங்கள்” - இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி!