Cinema

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்.. திரைத்துறையில் தொடரும் சோகம் !

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக அமைந்திருப்பவர்தான் பாலா. இவரது இயக்கத்தில் 3-வதாக வெளியான திரைப்படம்தான் 'பிதாமகன்'. கடந்த 2003-ம் ஆண்டு சூர்யா, லைலா, விக்ரம், தனம் சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய அளவு பெயர் பெற்றது.

இந்த படத்தை தயாரித்தவர்தான் வி.ஏ.துரை. எவெர்க்ரீன் மூவி இன்டெர்நேஷனல் (Evergreen Movie International) என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் ஆனார். முன்னதாக சத்யராஜின் 'என்னமா கண்ணு', 'லூட்டி', சூர்யாவின் 'நந்தா', 'மாயாவி', ஆர்யாவின் 'நான் கடவுள்', விஜயகாந்தின் 'கஜேந்திரா' உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

முன்னதாக பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த இவர், இந்த படங்கள் தயாரித்தன் மூலம் எந்தவொரு லாபமும் கிடைக்கவில்லை. எனவே திரையுலகில் இருந்து சற்று விலகியே இருந்தார். மேலும் இயக்குநர் பாலாவால் இவருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவை தொடர்ந்து ரஜினி, கருணாஸ், சூர்யா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இவருக்கு உதவிகள் செய்து வந்தனர். மேலும் இவர் சாலிகிராமத்தில் தனது நண்பர் வீட்டில் வசித்து வந்த நிலையில், இவருக்கு காலில் புண் ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் நடிகர் விக்ரம், வி.ஏ.துரைக்கு தரமான செயற்கை காலை பொருத்துவதற்கு தேவையான பண உதவிகளை செய்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், உடல்நிலை மோசமாகி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருவதோடு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கண்ணா 3 லட்டு திண்ண ஆசையா.. ஒரே நாளில் வெளியான ரஜினி, விஜய் படங்களின் Updates.. செம்ம குஷியில் ரசிகர்கள்!