Cinema

“இதை அரசு பொறுத்துக்கொள்ளாது” - நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்கு ஒன்றிய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதில்!

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து அண்மையில் வெளியான படம்தான் 'மார்க் ஆண்டனி'. டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் சென்சார் போர்டு என்று சொல்லப்படும் தணிக்கைக் குழு மீது நடிகர் விஷால் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட சென்சார் போர்டு ரூ.6.5 லட்சம் வரை லஞ்சமாக தணிக்கைக்குழு அதிகாரிகள் தன்னிடம் இருந்து பெற்றதாக வீடியோ மூலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட மும்பையில் உள்ள சென்சார் போர்டை அணுகியபோது, அங்கிருக்கும் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், வேறு வழியின்றி தானும் அதனை 2 தவணைகளில் திரையிட ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சமும் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஊழல் குறித்து படங்களில் காட்டுவது போல் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தான் இவர்களுக்குதான் லஞ்சம் கொடுத்ததாக சென்சார் போர்டு அதிகாரிகளின் பெயர்கள், வங்கி எண், IFSC எண் உள்ளிட்டவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, மோடி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் எனது கடின உழைப்பில் கிடைத்த பணம் லஞ்சத்தில் போவதா என்றும், தன்னை போல் வருங்காலங்களில் எந்த தயாரிப்பாளரும் பாதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இந்திய திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் தனது X வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நடிகர் விஷால் CBFC மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு மிகவும் துரதிருஷ்டவசமானது. ஊழலை அரசு பொறுத்துக் கொள்ளாது. இதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இன்று விசாரணை நடத்த மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதுபோல் ஏதேனும் CBFC மூலம் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..” : சென்சார் போர்டு மீது ஆதாரத்தோடு நடிகர் விஷால் லஞ்ச புகார் !