Cinema

இயக்குநர் பாரதிராஜா அறிமுகப் படுத்திய ஹீரோ காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்!

இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவர் பாபு. இவரை என் உயிர் தோழன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. இந்த படத்தில் இடம் பெற்ற ஏ ராசாத்தி ரோசாப்பு வா வா பாடல் இன்றும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்றது.

படம் பாரதிராஜாவிற்கு பெரிய பெயரைக் கொடுக்கவில்லை என்றாலும் அறிமுக ஹீரோவான பாபுவின் நடிப்பு கவனிக்கப்பட்டது. பிறகு ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். கிராமத்துக் கதைகள் இவருக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆவதாக கோலிவுட்டில் பேசப்பட்ட நிலையில் தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

இந்த படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. காட்சியில் மாடியிலிருந்து ஹீரோ குதிக்க வேண்டும். நிஜமாகவே குதிப்பதாக பாபு சொன்ன போது படக்குழுவினர் ஏற்க மறுத்தனர். ’டூப் வைத்துக் கொள்ளலாம்’ என இயக்குநரும் கூறியுள்ளார்.

இருந்தும் பாபு டூப் இல்லாமல் நடத்தார். இதில் மாடியிலிருந்து குதித்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்துவிட்டன.

1991ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சினிமா கனவுகளுடன் வந்த பாபுவின் வாழ்க்கையையே அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. அன்று முதல் இன்று வரை பாபுவின் வயதான அம்மா மட்டுமே அவரை உடனிருந்து கவனித்து வந்தார். அவருக்கும் வயது 80-ஐ கடந்துவிட்டது.

இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன் பாபுவின் உடல்நிலை மோசமடைய சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா, "திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த " என் உயிர் தோழன் பாபு " வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read: "ஆளப்போறான் தமிழன்" பாடல் பாடகர் மீது BOTTLE வீச்சு - இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்களை பாடியதால் ஆத்திரம்