Cinema

“மாரிமுத்துவின் பேச்சு மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வாக இருந்தது..” - முதலமைச்சர் இரங்கல் !

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை அடுத்துள்ள பசுமலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜி.மாரிமுத்து. இளம் வயதிலே திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று கனவோடு சென்னை வந்த இவர், ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் அஜித்தின் வாலி படம் தொடங்கி ஜெயிலர் படம் வரை குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மீம் டெம்ப்லேட்டாக வலம் வருகிறார். இந்த சூழலில் இன்று காலை 8.30 மணியளவில் எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, இவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் இவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவர் உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழ் சின்னத்திரை மட்டுமல்ல வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள இவரது உடலுக்கு திரையுலகினர், நண்பர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின் வருமாறு :

"கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் திரு. மாரிமுத்து அவர்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார்.

மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

Also Read: 23வயதில் வீட்டை விட்டு வெளியேற்றம்-இயக்குநர், நடிகர், நாத்திகவாதி: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மறுபக்கம்