Cinema
ஆரம்பம் முதல் கடைசி வரை ஹிட் : தயாரிப்பாளர், விநோயோகிஸ்தர், நடிகர்.. உதயநிதியின் சினிமா பயணம் !
திரைத்துறையில் தயாரிப்பாளர்,விநியோகஸ்தர்,நடிகர் என பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டி, தனக்கென தனி பாணியில் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியவர். ஓர் நிறுவனத்தின் மூலம் புதுமுக ஹீரோக்களின் கதைகளை தயாரிப்பதற்கு முன் வந்து, திரைத்துறையில் பல இயக்குனர்களின் வாழ்வை மாற்றிக்காட்டியவர்தான் உதயநிதி ஸ்டாலின்.
தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு ஹீரோவாக திகழும் உதயநிதி ஸ்டாலின், 2008ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தின் மூலம் திரைத்துறையில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அதைத்தொடர்ந்து ‘ஆதவன்’ ‘மன்மதன் அம்பு’ ‘7 ஆம் அறிவு’ ‘நீர்பறவை’‘பாஸ் என்ற பாஸ்கரன்’ ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க தொடங்கினார்.
இப்படி தயாரிப்பாளராக திகழ்ந்தவர் 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'ஆதவன்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகி, 2012-ல் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்த தனது முதல் படத்தில் நல்ல வரவேற்பை பெற்று, தனது முதல் படத்தில் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் நீங்காயிடம் பிடித்தார்.
இதன் பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், இப்படைவெல்லும், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், நிமிர், சைகோ,கண்ணே கலைமானே, நெஞ்சுக்கு நீதி, கழகத் தலைவர், மாமன்னன் என பத்திற்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளர், நடிகர் என்ற அவதாரத்தைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அரண்மனை 3, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன், லவ் டுடே, சர்தார், டான், பீஸ்ட் போன்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை ரெட்ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு, விநியோகிஸ்தராகவும் மாறினார். தற்போது லைக்கா நிறுவனத்துடன் இணைந்து திரைக்குவரவிருக்கும், கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் இந்தியன்-2 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.
இதனிடையே அரசியல் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின், சில மாதங்களுக்கு முன்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம்தான் தனது இறுதி படம் என தெரிவித்தார். ஜூன் மாதம் 29ம் தேதியன்று திரைக்குவந்த மாமன்னன் திரைப்படம் வெளியான முதல் நாளில் ஆறு கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மாமன்னன் திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து பெரும் சாதனை படைத்திருந்தது. கடந்த வாரத்தில் மட்டும் 1.2 மில்லியன் பார்வையாளர்கள் இத்திரைப்படத்தை பார்வையிட்டுயிருக்கின்றனர்.
இந்த திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் ஓடிடி டிரெண்டிங்கில் புதிய சாதனைபடைத்ததோடு, ஓடிடி தளத்தில் வெளியாகியும், திரையரங்கில் ஐம்பது நாட்களை கடந்தும் மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. மாமன்னன் படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றி விழாவில் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்த உதயநிதி ஸ்டாலின், படத்தை குறித்த கருத்துக்களை கூறியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "படப்பிடிப்பின் போது எனக்கு அடிபட்டது,என்னுடைய முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி எனக்கு மிகப் பெரிய வெற்றியை தேடி தந்தது. அதேபோல் என்னுடைய இந்த கடைசி படமும் எனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்துள்ளது. வடிவேலு இந்த படத்தில் நடிக்கவில்லை என்று இருந்ததால்,இந்த படத்தை ட்ராப் செய்து விடலாம் என்ற எண்ணம் தான் எங்களுக்கு வந்தது " எனக் கூறினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ் "நாம் பாடிக் கொண்டிருப்பது பழைய பாடலாக இருக்கலாம். அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன். என் வயிற்றிலிருந்து குடலை உருவி ஓரிழை யாழாக மாற்றி அதை தெருத்தெருவாக மீட்டி வருவேன். உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக் கொண்டே இருப்பேன்'' என்று கூறினார். விளையாட்டாக ஆதவன் திரைப்படத்தில் படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக திரையுலகைத் தாண்டியும் அரசியலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்.
- ந.வினித்குமார்
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!