Cinema

“அவருக்காக அதுல நடிச்சேன்.. காசு கொடுக்கலானா கூட நடிச்சிருப்பேன்..” - மனம் திறந்த விஜய் சேதுபதி !

தமிழில் முன்னணி இயக்குநராக இருப்பவர் அட்லீ. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் முன்னணி ரோலில் நடிக்க, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என தென்னிந்திய நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டெம்பர் 7-ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிவுள்ளது.

இதன் முதல் பார்வை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி முதல் முறையாக ஷாருக்கானுடன் பாலிவுட்டில் இணைகிறார். இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே இந்த படம் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அண்மையில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நடிகர் விஜய் சேதுபதி பேட்டி அளித்தார். அதில் தான் இந்த படத்தில் ஷாருக்கானுகாக தான் நடித்ததாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ ‘ஜவான்’ படத்தில் நான் ஷாரூக்கானுக்காக மட்டும் தான் நடித்தேன். இந்த படத்துக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நான் நடித்திருப்பேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் போல் நடந்துகொள்ளவில்லை. முதல்நாள் ஷூட்டிங்கில் நான் லேசாக பயந்தபோது அவர் என்னை குழந்தை போல் பார்த்துக்கொண்டார். அவருடன் நடித்தது எனக்கு மிகவும் பிடித்தது. அவர் மிகவும் இனிமையானவர். அவருடன் நிறைய கலந்துரையாடினேன். அவர் சக நடிகர்களிடம் கனிவாக நடந்துகொள்வார்" என்றார்.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படம் குறித்து ஷாருக்கான் படம் குறித்து விஜய் சேதுபதிக்கு பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.