Cinema

“சமத்துவம் போற்றும் மாமன்னன்..” - வாழ்த்து கூறிய ரஜினிக்கு உதயநிதி சொன்ன அன்பு கலந்த நன்றி !

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது 3-வது படமாக உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருமாவான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் கடந்த 29-ம் தேதி வெளியானது.

தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சமூக நீதி பேசியிருப்பதாக படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படம் வெளியாகி தற்போது கோடி கணக்கில் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் பல பாசிட்டிவ் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமத்துவத்தையும், சமூக நீதியும் பேசுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மக்கள் அனைவரும் இதனை பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்துக்கு தனுஷ், பா.ரஞ்சித், இயக்குநர் ராஜமுருகன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் 'மாமன்னன்' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "சமத்துவம் போற்றும் 'மாமன்னன்' திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு 'மாமன்னன்' திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: பராசக்தியில் தொடங்கி.. சமூகநீதியைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கிறோம்.. பா.ரஞ்சித்துக்கு உதயநிதி பதில்