Cinema

பராசக்தியில் தொடங்கி.. சமூகநீதியைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கிறோம்.. பா.ரஞ்சித்துக்கு உதயநிதி பதில்

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது 3-வது படமாக உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருமாவான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் கடந்த 29-ம் தேதி வெளியானது.

தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சமூக நீதி பேசியிருப்பதாக படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படம் வெளியாகி 2 நாட்களே ஆகும் நிலையில், சுமார் 25 கோடிக்கு மேலாக வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் பல பாசிட்டிவ் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பா. ரஞ்சித் இந்த படம் அரசியலில் சாதி இருப்பது பற்றி பேசப்பட்டிருப்பதாகவும், அது தற்போதும் இருப்பதாகவும் படத்தை பாராட்டியும் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதில் நன்றி தெரிவித்தும், விளக்கம் அளித்தும் பதில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "`மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.

`பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.

ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி."

Also Read: “பன்றிகள், பெரியார், அம்பேத்கர்”: படம் நெடுகிலும் அழுத்தமான குறியீடுகள்.. மாமன்னனுக்கு காங். புகழாரம்!