Cinema

” ’மாமன்னன்’ படத்தின் கருத்துகள் மக்களை போய் சேர வேண்டும்”.. நடிகர் உதயநிதி ஸ்டாலின்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இதன் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் மாமன்னன் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் சென்னை சத்தியம் திரையரங்கத்தில் மாமன்னன் திரைப்படத்தைப் படக்குழுவினர் கண்டுகளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், "மக்களுக்குக்காக்க எடுக்கப்பட்ட படம் தான் மாமன்னன். திரையரங்கத்தில் ரசிகர்களிடம் உற்சாகத்தைக் காண முடிகிறது. படத்தைப் பற்றி மக்கள் விவாதிப்பார்கள்.

இந்த படத்தை எடுக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தை மக்களிடம் சேர்க்க என்ன வேண்டுமோ அதற்கான அனைத்தையும் செய்தவர் உதயநிதி அவர்கள். அவர் இல்லை என்றால் படம் வெளியே வந்திருக்காது" என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், "6 மாத உழைப்பை மக்கள் வரவேற்றுக் கொண்டாடுவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே படத்தில் நாட்டையே திருத்துவேன் என்று சொல்ல வரவில்லை. இந்த படத்தின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றேன்.

மாமன்னன் படத்தில் உள்ளக் கருத்துகள் மக்களைப் போய்ச் சேர வேண்டும். வரும் காலங்களில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை. மாமன்னன்தான் கடைசி படம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் - ஏதேச்சதிகார செயல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!