Cinema

“நாங்களும் நல்ல படம் எடுக்கிறோம்.. அதையும் பாருங்க..” - தமிழ் ரசிகர்களுக்கு இந்தி நடிகர் வேண்டுகோள் !

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் ஷாஹித் கபூர். கடந்த 2002-ல் வெளியான Ishq Vishk என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ஜப் வி மெட், ஜைதர், பத்மாவத், உட்தா பஞ்சாப் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். 2019-ல் வெளியான 'கபீர் சிங்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இது தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீ-மேக் ஆகும். தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது.

திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான Farzi சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தொடர்ந்து இவரது நடிப்பில் அலி அபாஸ் இயக்கத்தில் 'Bloody Daddy' என்ற படம் நேற்று வெளியானது.

தற்போது வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தென்னிந்திய ரசிகர்கள் இந்தி திரைப்படங்களை ரசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனம் படைத்தவர்கள். அவர்கள் எப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களுக்கு அதரவு தருகிறார்களோ அதே போல் தென்னிந்திய திரை ரசிகர்களும் இந்திப் படங்களுக்கு ஆதரவு தர வேண்டும். நாங்களும் நல்ல படங்களை எடுத்திருக்கிறோம்” என்றார்.

மேலும், ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்களா என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் கடந்த 20 ஆண்டுகளாக பாலிவுட்டில் நடித்து வருகிறேன். எனக்கு இந்த இடம் செளகரியமாக இருக்கிறது. ஹாலிவுட்டில் ஏதோ ஒரு குப்பைப் படத்தில் நடிப்பதற்கு பதில், நல்ல கதைகளைக் கொண்ட தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிப்பதை நான் தேர்வு செய்வேன்.” என்றார்.

Also Read: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ரோஜா.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !