Cinema

அடுத்தடுத்து அதிர்ச்சி.. ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இயக்குநர்: போலீசார் தொடர் விசாரணை

போஜ்புரி திரையுலகில் பிரபல இயக்குநராக இருப்பவர் சுபாஷ் சந்திர திவாரி. சில படங்கள், குறும்படங்கள் இயக்கி பிரபலமான இவர், தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்காக அவர் உத்தர பிரதேசத்துக்கு படக்குழுவுடன் சென்றுள்ளார். எனவே அங்கு சோனபத்ரா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரபல ஹோட்டல் திருப்பதி-ல் படக்குழுவுடன் தங்கி இருந்தார்.

இந்த சூழலில் நேற்று அறைக்கு சென்ற இவர், இன்று தனது அறையில் இருந்து வெளிவரவில்லை. இதனால் பதற்றமடைந்த படக்குழு உடனே ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கதவை திறந்து பார்க்கையில் இயக்குநர் சுபாஷ் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவரை சோதனை செய்ததில், மூச்சு இல்லாமல் இருந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இயக்குநர் சுபாஷ் சந்திர திவாரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இயக்குநர் சுபாஷ் சந்திர திவாரியின் உடலில் எந்த ஒரு காயங்களும் இல்லை என்பதால் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கூறமுடியும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதே போல் நிதேஷ் பாண்டே என்ற பிரபல நடிகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதே போல் பிரபல பெங்காலி நடிகை சுசந்திர தாஸ்குப்தா பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அதற்கு முன்னதாக பிரபல மாடல் நடிகர் ஆதித்யா ராஜ்புத் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். நேற்று பிரபல இந்தி நடிகை வைபவி தனது வருங்கால கணவருடன் சுற்று பயணம் மேற்கொள்ளும்போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இப்படி தொடர்ந்து திரை பிரபலங்களின் மரண செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Shooting முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த இளம் நடிகை.. எதிரே வந்த லாரி மோதியதில் உடல் நசுங்கி பலி !