Cinema

நாடகம் to திரையுலகம்.. பிரபல பழம்பெரும் நடிகை வசந்தா திடீர் மறைவு.. திரையுலகினர் அஞ்சலி !

கடந்த 1965-ம் ஆண்டு ஜோசப் என்ற இயக்குநர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் 'இரவும் பகலும்'. ஜெய்சங்கர் நடிப்பில் உருவான இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை வசந்தா. எளிய நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது.

தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் சக்கரம், எச்சில் இரவுகள், நங்கூரம், மாம்பழத்து வண்டு, ஓசை, ராணித்தேனி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக கணவன், அந்த 7 நாட்கள், இராணுவ வீரன் உள்ளிட்ட பல படங்களில் துணைக்கதாபாத்திரங்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவிக்கு அம்மாவாக நடித்த இவர், ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிக்கு தாயாகவும் நடித்திருந்தார். ரஜினியின் மூன்று முகம் படத்திலும் நடித்துள்ளார். பிரபல நாடக மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் நாடகக்குழுவால் நடத்தப்பட்ட மேடை நாடகங்கள் பலவற்றிலும் நடித்துள்ள இவர், திரைத்துறையில் சாதனை செய்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது திரைத்துறையில் இருந்து ஓய்வில் இருக்கும் இவருக்கு, கடந்த சில நாட்களாக உடல் நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று பகல் நேரத்தில் மரணமடைந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள், நடிகைகள் உயிரிழந்து வரும் செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட உடல்நலக்குறைவால் நடிகர் மனோபாலா காலமானார். தொடர்ந்து பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. பிரபல பழம்பெரும் தமிழ் நடிகை திடீர் மறைவு.. சோகத்தில் திரையுலகம் !