Cinema

ஏர்போர்ட்டில் வைத்து ரசிகரிடம் மோசமாக நடந்துகொண்ட ஷாருக்கான்.. வீடியோவுக்கு குவியும் கண்டனங்கள் !

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் எந்த படம் வந்தாலும் அது வசூல் ரீதியாக பெரிய வசூல் வேட்டையை செய்து விடும். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் 'பதான்'. இந்த படத்திற்கு தடை விதிக்குமாறு இந்துத்துவ கும்பல் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருப்பினும் இதனை படக்குழு பெரிதாக கண்டுக்கவில்லை.

கடந்த ஜனவரி 25-ம் தேதி உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம், முதல் நாளிலே கோடி கணக்கில் வசூலை அள்ளிக்குக்குவித்தது. ரூ.225 கோடி செலவில் உருவான இந்த படம் சுமார் ரூ.1,050.3 கோடி வரை வசூல் சாதனை செய்தது. ஷாருக், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் என பலரும் நடித்துள்ள இந்த படம் தேசப்பற்று பற்றி பேசுகிறது. இந்தாண்டு வெளியான இந்திய படங்களில் நிச்சயம் அதிக வசூல் வேட்டை செய்த படம் இதுவாக தான் இருக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் வெற்றி என்பது பாலிவுட்டின் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த மாஸ் வெற்றி என்றே கூறலாம். இதனாலே பாலிவுட் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இதனை கொண்டாடி தீர்த்தனர். இதனிடையே அட்லீ இயக்கத்தில் ஷாருக் 'ஜவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

ஜவான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சில படங்களில் ஷாருக் கமிட் ஆகியுள்ளார். இந்த சூழலில் ஷாருக் வெளிநாடு சென்று மும்பை ஏர்போட்டில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏர்போட்டில் வைத்து ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில் ஷாருக் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, உடனடியாக அவரது மொபைல் போனை தட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் இவ்வாறு செய்வது இது முதல் முறையல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சல்மான் காணும், செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் மொபைல் போனை தூக்கி வீசிய சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தமிழ்நாட்டிலும் நடிகர் சிவகுமார், செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் மொபைல் போனை தட்டி விட்டுள்ள சம்பவம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. பின்னர் அந்த ரசிகருக்கு புது மொபைல் போனை சூர்யா குடும்பத்தினர் வழங்கினர்.

மேலும் அண்மையில் ரன்பீர் கபூரும் இதே போல் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது, அது சரியாக வேலை செய்யவில்லை என்பதால் அவரது மொபைல் போனை தூக்கி வீசினார். இந்த வீடியோ பெரும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது ஒரு மொபைல் கம்பெனிகான விளம்பரம் என்று கூறி முழு வீடியோவை வெளியிட்டது விளம்பர குழு என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மாஸ் எண்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்.. ஜெயிலர் படத்தின் வெளியீட்டு நாள் அறிவிப்பு !