Cinema

“விவாகரத்து என்பது தோல்வி அல்ல..” - Photoshoot எடுத்து கொண்டாடிய தமிழ் சீரியல் நடிகை ஷாலினி.. பின்னணி ?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது விவகாரத்தை போட்டோஷூட் நடத்தி கொண்டாடி மகிழ்ந்தார். அதில் அவரது திருமண ஆடையை கிழித்து, எரித்து, போட்டோவை காலில் போட்டு மிதித்து, அருகே அமர்ந்து மது அருந்துவது போல் வகை வகையாக இடம்பெற்றிருந்தது.

இது இணையத்தில் வைரலான நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில், விவாகரத்து என்பது கசப்பான விஷயம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். இந்த போட்டோஷூட்டை அவரது தாயார் எடுத்திருந்தார். இது கடந்த சில நாட்களாக இணையத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரபல தமிழ் சீரியல் நடிகையும் தனது விவகாரத்தை போட்டோஷூட் நடத்தி கொண்டாடியுள்ளார்.

தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' என்ற தொடரின் மூலம் அறியப்பட்டவர் ஷாலினி. சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான 'சூப்பர் மாம்' என்ற நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் தனது மகள் ரியாவுடன் கலந்துகொண்டு இறுதி கட்டம் வரை சென்றார்.

இதனிடையே இவருக்கு திருமணமான சில மாதங்களிலே இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதன் காரணமாக இவர் விவாகரத்து செய்து இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில் ஷாலினியின் ரசிகர் என கூறி ரியாஸ் என்பவர் அவருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நண்பராக பழகிய நிலையில் அது காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து ஷாலினியும், ரியாஸும் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்கள் பிறகு தான் ரியாஸின் உண்மை முகம் ஷாலினிக்கு தெரியவந்தது. தினமும் குடித்துவிட்டு ஷாலினியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும் அவர் ரியாஸை விட்டு பிரியாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அப்போதும் கூட ஷாலினியை கொடுமை செய்து வந்துள்ளார் ரியாஸ்.

இதையடுத்தும் ரியாஸை ஷாலினி விவாகரத்து செய்ய முடிவு செய்து மனு தாக்கல் செய்திருந்தார். குடித்துவிட்டு தன்னை அடிப்பது மட்டுமின்றி, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் தற்போது ஷாலினிக்கும் ரியாஸுக்கும் விவாகரத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பின்னரே, தனது விவகாரத்தை அமெரிக்க பெண் கொண்டாடிய பாணியில், ஷாலினியும் கொண்டாடி போட்டோஷூட் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து தனியார் சேனல் ஒன்று ஷாலினி இடம் பேட்டி எடுத்துள்ளது.

அப்போது இந்த நிகழ்வு குறித்து ஷாலினி கூறுகையில், "திருமணம் முடிந்து சில காலங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். ஆனால் ரியாஸ், திடீரென குடித்து வந்து என்னை அடிப்பார். சரி குழந்தை பிறந்ததற்கு பிறகாவது திருத்துவார் என்று பார்த்தால், அப்போதும் இல்லை. ஒருமுறை அவர் என்னை அடிக்கும்போது பதிலுக்கு நானும் அடித்து விட்டேன். அதன்பிறகு தான் விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். தற்போது விவாகரத்தும் கிடைத்து விட்டது." என்று தெரிவித்தார்.

Also Read: ஆருத்ரா மோசடியில் தொடர்பு.. வசமாக சிக்கிய ஆர்.கே.சுரேஷ்.. வங்கி கணக்கை முடக்கி போலிசார் அதிரடி !