Cinema
“காசு வந்தா காக்கா கூட.. ஆனா காசு தானா தேடி வராது” -பழைய வீடியோவை பதிவிட்டு பிரியா பவானி சங்கர் உருக்கம்!
ஆரம்பத்தில் டிவியில் செய்தியாளராக இருந்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர், பின்னர் தனது திறமையினால் செய்தி வாசிப்பாளராக விளங்கினார். அதன்பிறகு சில விளம்பர படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வந்தார். தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு 2017-ல் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார்.
அந்த படம் இவருக்கு பெரிய பெயர் பெற்றுக்கொடுக்கவே தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாபியா, யானை, களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம், அகிலன் என படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கூட பத்து தல படத்தில் நடித்துள்ளார். அதோடு பிரியா, ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நேற்றைய முன்தினம் 'ருத்ரன்' படம் வெளியாகி திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் தனது பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் செய்தி வாசிப்பாளராக ஆகும் முன்னே தனியார் சேனலில் செய்தியாளராக இருந்தார். அப்போது கெளதம் வாசுதேவ் மேனனை பேட்டி எடுத்தார். அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாய்ஸ்/கேர்ள்ஸ், மக்கள் உங்கள் தோற்றத்திற்காகவும் உடலுக்காகவும் உங்களை தாழ்த்துவார்கள், கொடுமைப்படுத்துவார்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்கள் வரையறுக்க அனுமதிக்காதீர்கள்.
அழகுக்கு வரையறை இல்லை. ஒரு சாதாரண கல்லூரி மாணவியால் செய்ய முடியாத ஸ்கின் கேர், வாழ்க்கை முறையை நடிகர்கள் நிறைய செலவிடுவார்கள். அதனால் உங்களிடம் நல்ல தோற்றமும், உடல்வாகும், தோல் நிறமும் இல்லையென்றால் பரவாயில்லை. இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து மயங்கி விடாதீர்கள்.
இன்று நான் தயாராக எனக்கு 10 பேர் கொண்ட குழு இருக்கிறார்கள். அழகுக்கு இதுதான் வரையறை என்று எதுவும் இல்லை. நிச்சயம் அது இலக்கு இல்லை. அது ஒரு வேலை. அதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.
காசு வந்தா காக்கா கூட கலராகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். காசு தானா தேடி வராது. நீங்கள் உலகத்துடன் சண்டையிட்டு விரும்புவதை பெற வேண்டும். உங்களுக்கு அது கிடைக்கும்போது அதனை வைத்து நீங்கள் செய்யப்போகிறீர்கள் என முடிவெடுங்கள். கலர் ஆகனும் என்று எந்த அவசியமும் இல்லை.
ஐ லவ் யூ ராஜவேல். நீ அப்போது எப்படி பார்த்தாயோ, அப்படியே தான் இப்பொழுதும் பார்க்கிறாய் நன்றி. நீங்கள் இதுபோன்ற நபரை கண்டுபிடித்தால் விட்டுவிடாதீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். ராஜவேல் என்பவர் பிரியா பவானி சங்கரின் காதலர் ஆவார். இவரது இந்த பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் கைவசம், இந்தியன் 2, டிமான்டி காலனி 2 ஆகியவை உட்பட 4 படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!