Cinema

வாரணம் ஆயிரம், துப்பாக்கி, IPL தீம்.. கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்.. திரையுலகில் மற்றொரு அதிர்ச்சி!

திரைத்துறையில் தற்போது அதிகமான இறப்பு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக காணப்படுகிறது. இந்தாண்டு முக்கிய திரைபிரபலங்களான வாணி ஜெயராம், மயில்சாமி என அதிகமானோர் உடல்நலக்குறைவு, சிறு விபத்து என உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலம், காமெடி நடிகர் கோவை குணா உடல் நலக்குறைவால் காலமானார். இப்படி தொடர்ந்து அண்மைக்காலமாக இறப்பு செய்திகள் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பிரபல கிட்டார் வாசிப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இசைத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு இசைக்கருவிதான் கிட்டார். கிட்டார் வாசிப்புக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். இப்படி ஒரு கிட்டார் வாசிப்பாளர்தான் ஸ்டீவ் வாட்ஸ் (Steeve Vatz). கிட்டார் வாசிப்பாளராக இருக்கும் இவர், ஆரம்ப காலத்தில் ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு வந்தார்.

அதன்பிறகு 2008-ல் வெளியான 'பீமா' படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இவரை அறிமுகம் செய்தார். இதையடுத்து தொடர்ந்து இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக அதே ஆண்டு மீண்டும் ஹாரிஸ் இசையில் உருவான 'வாரணம் ஆயிரம்' படத்தில் இவர்தான் கிட்டாரிஸ்ட்டாக இருந்தார். இது இவருக்கு திரைத்துறையில் மிகப்பெரிய பெயர் கொடுக்கவே தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், டி.இமான், அனிருத் என பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து இவர் பணியாற்றினார். அதோடு இவர் துப்பாக்கி, நீதானே எந்தன் பொன்வசந்தம், போடா போடி, மரியான், விஸ்வரூபம், என்னை அறிந்தால் என முக்கிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து இவர் சில படங்களில் இடம்பெற்ற சில பாடல்களுக்கு பின்னணி பாடகராக இருந்துள்ளார். குறிப்பாக விக்ரமின் இருமுகன் படத்தில் இடம்பெற்ற "இருமுகன் சேட்டை..", யாயா படத்தில் 'நத்திங் வாண்ட்டு.." என சில படங்களில் பாடியுள்ளார். தொடர்ந்து இவர் கடந்த 2015- வெளியான 'உப்பு கருவாடு' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மேலும் IPL உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தீம் பாடலுக்கும் கிட்டார் வாசித்துள்ளார். இப்படி தொடர்ந்து திரைத்துறையில் வளர்ந்து வரும் இவர், தனியாக இசை வகுப்பும் எடுத்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மருத்துவமனையை அணுகியபோது, அவருக்கு மூளையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது கிட்டார் இசையில் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..", "அடியே கொல்லுதே.." பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இன்றளவும் வரவேற்பை பெற்று வருகிறது. 43 வயதில் கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸின் மறைவு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி என்ன ?