Cinema

நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி என்ன ?

தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவர் மாடல் துறையில் இருந்து திரைத்துறையில் கால்பதித்துள்ளார். கவர்ச்சிகரமான நடிப்பில் இன்றைய இளைஞர்களை கவர்ந்துள்ள இவருக்கு ரசிகர்கள் ஏராளம். சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், அதன்பிறகு பெரிய படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

சந்தோஷ் பி இயக்கத்தில் 2018-ல் வெளியானது 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. 18+ படமான இந்த படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், யாஷிகாவுக்கு இதன்மூலம் ரசிகர்கள் பட்டாளமே உருவானது. தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2-வில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன்பிறகும் இவருக்கு அநேக படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து கொண்டிருந்தார். இந்த சூழலில் இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மகாபலிபுரம் அருகே தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் ஈ.சி.ஆர் சூளேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தால் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் நடிகை யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதோடு அவருடன் பயணித்த இரு ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவிதமாக அவருடன் பயணித்த அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து சுயநினைவு திரும்பிய யாஷிகாவுக்கு தோழியின் இறப்புச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் கதறி அழுதார். மேலும் தன்னால்தான் தனது தோழியின் உயிர்போனது போனது என்று மிகவும் வருந்தினார். மேலும் "என்னால்தான் நீ என்னோடு இல்லாமல் போவாய் எனும் நிலை வரும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து யாஷிகா மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்த யாஷிகா தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், யாஷிகா செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்றைய முன்தினம் ஆஜராக வேண்டியது இருந்தது. ஆனால் அவர் ஆஜராகாததால் வரும் 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது மீண்டும் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கு பிறகு யாஷிகா, தி லெஜெண்ட் படத்தில் ஒரு பாட்டுக்கும், பெஸ்டி என்ற ஹாரர் படத்திலும் நடித்தார். தற்போது தொடர்ந்து 5 படங்களில் யாஷிகா பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஆரம்பம்..” - உகாதியில் ‘காந்தாரா 2’ படத்தின் மாஸ் அப்டேட் வெளியிட்ட ரிஷப் ஷெட்டி.. குஷியில் ரசிகர்கள் !