Cinema

“உயர போகணும்னு நினச்சேன்.. இவ்ளோ உயரத்துக்கு போவாருனு நினைக்கல”: கோவை குணா குறித்து மனம் திறந்த மதன் பாப்

தனியார் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான ஸ்டாண்ட் அப் காமெடி ஷோதான் 'அசத்தப்போவது யாரு?'. நடிகர் சிட்டி பாபு, மதன் பாபு ஜட்ஜாக இருந்து வந்த ஷோவில் கோவையை சேர்ந்த குணாவும் பங்கேற்றார். தனது அசத்திய திறைமைகளால் ரசிகர்களை கவர்ந்த இவர், காமெடியில் மட்டுமின்றி, மிமிக்கிரி செய்வதிலும் வல்லவராக இருந்தார்.

சிவாஜி, ரஜினி, கமல், கவுண்டமணி என நடிகர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவைகளின் குரல்களை வைத்தும் காமெடி செய்து வந்தார். குறிப்பாக ஸ்டாண்ட் அப் காமெடி பிரபலமான மதுரை முத்துவுடன் இவர் செய்த ஷோக்கள் ஏராளம். குறிப்பாக 90'ஸ் கிட்ஸை வெகுவாக கவர்ந்த இவர், தனது நகைச்சுவை உணர்வு மூலம் சோகத்தில் இருப்பவரை கூட சிரிக்க வைத்து விடுவார்.

இந்த நிகழ்ச்சியானது கலைஞரை உருவாக்கும் நோக்கில் உருவானது. இந்த நிகழ்ச்சி மூலம்தான் மதுரை முத்துவும் பிரபலமானார். அந்த வரிசையில் கோவை குணாவும் தவிர்க்க முடியாத ஒருவராக உள்ளார். கோவையை சேர்ந்த இவர் பல கனவுகளோடு சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அசந்துபோவது யாரு-வை தொடர்ந்து மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி ஷோவான 'கலக்கப்போவது யாரு?'-விலும் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன்மூலம் மேலும் ரசிகர்களை கவர்ந்த இவர், இந்த ஷோவின் முதல் சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார். இதையடுத்து இவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர், அண்மைக்காலமாக உடல் மெலிந்து காணப்பட்டார்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு உடல் நலப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் முதலில் பங்கேற்ற அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நடிகர் மதன் பாப் கோவை குணா குறித்து மனம் திறந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அதில் பேசிய அவர், "கோவை குணாவுடைய மரணம் மிகவும் வருத்தமாக உள்ளது. அவரை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு தெரியும். ஆள் நன்றாக கும்முனு இருப்பார். அவர் கோட் சூட் அணிந்து வந்து பெர்ஃபாமன் பண்ணும்போது வேற லெவலில் இருக்கும். அவரது நிகழ்ச்சிக்கு அனைத்திற்கும் நான் நடுவராக இருந்துள்ளேன்.

அதன் பிறகு அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நாள் நான் தயாரிக்கவும் செய்தென். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களிலேயே நம்பர் ஒன் டேலண்ட் என்றால் அவர்தான். கவுண்டமணிக்கு அப்புறம், அவரை போல் செய்த ஒருவர் இவர்தான் இன்று பலர் செய்யும் கவுண்டமணியின் டான்ஸை கோவை குணாதான் முதன்முதலில் செய்தார்.

அவரது ஜோக் எல்லாமே நிஜமாக இருக்கும்.. அவரே சொந்தமாக ஜோக் எழுதி நகைச்சுவைகளை செய்வார். ஒரு நொண்டி பிச்சைக்காரன் போல் செய்ய சொன்னால் கூட செய்வார். அவரை நான் மிகவும் ஊக்குவித்தேன். எனது நிகழ்ச்சிக்கும் அவரை அழைப்பேன். என் நண்பர் எடுத்த படத்தில் எனக்கு ஒரு வேடம் கொடுத்தார். ஆனால் எனக்கு தேதியில்லாததால் நான்தான் கோவை குணாவை பரிந்துரைத்தேன்.

என் நண்பர் கிட்டார் ராஜன் எடுத்த படத்தில் எனக்கு ஒரு வேடம் கொடுத்தார். ஆனால் எனக்கு தேதியில்லாததால் நான்தான் கோவை குணாவை பரிந்துரைத்தேன். அந்த படத்துக்காக இவர் 20 நாட்கள் சென்றார். இவரது நகைச்சுவை உணர்வு அவர்களுக்கும் பிடித்துவிட்டது. தினமும் படப்பிடிப்பு சென்று வரும்போது பணத்துடன்தான் வருவார்.

ஆனால் கெட்ட பழக்கங்கள் அளவோடு இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் படகு செல்லும். ஆனால் படகுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல அளவுக்கு அதிகமாக கெட்ட பழக்கம் இருந்தால் அது மிகவும் மோசமானது. இந்த நேரத்தில் இதை நான் பேசக்கூடாது.

ஆனால் இதனை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. நடுவில் சினிமா துறையில் இருப்பவர்களின் இறப்பு செய்தி அதிகமாக வருகிறது. அதில் பலருக்கும் இந்த பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. எனவே அதிகமாக எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள்.

உண்மையை சொன்னால் இவர் சரியாக இருந்து, சரியான வழியில் சென்றிருந்தால் இன்னொரு சந்திரபாபுவாக இருந்திருப்பார். பாடுவார், ஆடுவார், ஒரிஜினலாக பெர்ஃபார்ம் பண்ணுவார், இன்னொருவரை மிமிக் செய்வார். அவரது இந்த மரணம் ஈடு செய்ய முடியாதது. கடைசி நேரத்தில் அவர் உறவுக்காரர்களுடன் எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதனால் பேசாமல் இருந்தேன்.

சின்னத்திரையிலிருந்து பெரியதிரை வந்தவர்களில் பெரிய இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர் அவர், ஆனால் வரவில்லை. இனி எங்க வரப்போறாரு. அவர் உயர உயர போகணும் என நினத்தேன். ஆனால் இவ்வளவு உயரத்துக்குப் போவார் என நினைத்துப் பார்க்கவில்லை. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Also Read: #FactCheck: மதம் மாறியதாக வதந்தி பரப்பும் பாஜகவினர்.. 2020 ம் ஆண்டு முதலே மணிமேகலை கொடுத்து வரும் பதிலடி!