Cinema
“அனுராக் காஷ்யப் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்”: பிரபல இயக்குநர் மீது இமைக்கா நொடிகள் பட நடிகை புகார்!
பாலிவுட்டில் பிரபலமான இயக்குநர்தான் அனுராக் காஷ்யப். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர், திரைத்துறையில் புதிய முயற்சியை கொண்டு வர வேண்டும் என்று மும்பைக்கு வந்தார். தொடர்ந்து தன்னால் முடிந்த வரை ரசிகர்களுக்கு பிடித்தவாறு படங்களை கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து இயக்கத்தில் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பலவை ஹிட் கொடுத்தாலும் சில, விமர்சன ரீதியாக மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் இயக்கத்தில் இருந்தே அப்படியே தயாரிப்பாளராக உருவானார். இவரது வருகை பாலிவுட் சினிமாவில் பல மாற்றங்களை கொடுத்தது.
தொடர்ந்து படங்களிலும் நடித்து வரும் இவர், கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் ரசிகர்களிடம் தனது முதல் படத்திலேயே பெரிய அளவு வரவேற்பை பெற்றார். சிறந்த வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தற்போது தமிழில் சுந்தர் சியுடன் 'ஒன் டு ஒன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதே போல் இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர்தான் பயல் கோஷ். பிரயாணம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர், ஜூனியர் என்.டி.ஆர் உடன் 'Oosaravelli' என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் 2017-ம் ஆண்டு அறிமுகமான இவர், இந்தி தொடர் ஒன்றிலும் நடித்தார்.
பெரிதாக பட வாய்ப்புகள் இவருக்கு இல்லை என்றாலும், மாடலிங் செய்து வருகிறார். தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வரும் இவர், அனுராக் மீது பாலியல் வன்கொடுமை குற்றசாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்தியாவில் தேசிய விருது பெற்ற 2 இயக்குநர்கள் மற்றும் சில முக்கிய நட்சத்திரங்களுடன் நான் பணியாற்றி உள்ளேன். ஆனால், இதுவரை அவர்கள் யாரும் என்னை தவறான எண்ணத்தோடு என்னை தொட்டது கூட கிடையாது.
ஆனால், பாலிவுட்டில் இயக்குநர் அனுராக் காஷ்யப், மூன்றாவது சந்திப்பின்போதே என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இப்போது சொல்லுங்கள் நான் ஏன் தெற்கைப் பற்றி தற்பெருமை காட்டக்கூடாது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு மற்றொரு பதிவில், "நானும் ஒரு சூப்பர் ஸ்டாரான ஜூனியர் என்.டி.ஆருடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் அவர் கூட என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதில்லை, அப்படிப்பட்ட ஜென்டில்மேன் அவர், தென் திரையுலகின் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு." என்று ஜூனியர் என்.டி.ஆரை குறிப்பிட்டு புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.
பயல் கோஷின் இந்த பதிவு தற்போது பாலிவுட் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பொது வெளியில் பிரபல இயக்குநர் மீது அவர் வைத்துள்ள இந்த பகிரங்க குற்றச்சாட்டால் பெரும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
இதே போல் முன்னதாக அனுராக் மீது இவர் குற்றசாட்டை வைத்துள்ளதும், அதற்கு அனுராக்கிற்கு ஆதரவாக திரைபிரபலங்கள் கருத்து தெரிவித்ததும் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!